ஜனநாயக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ள மக்களின் போராட்டத்திற்கு செவிசாய்க்காதது மிகவும் அருவருப்பானது!
கடந்த வாரத்தில் ஒரு சிறிய குழுவினர் காலிமுகத் திடலில் உள்ள பண்டாரநாயக்கவின் உருவச் சிலை மீது எறி அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் ஏற்கனவே கூறியது போல், அந்த செயலை வன்மையாக கண்டிப்பதாகவும் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அந்தப் பதிவில் தொடர்ந்தும் அவர் தெரிவித்திருப்பதாவது,
கடந்த வாரத்தில் ஒரு சிறிய குழுவினர் காலிமுகத் திடலில் உள்ள முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்கவின் உருவச் சிலையின் மீது ஏறி அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக எனக்கு அறிய கிடைத்தது.
அவர்கள் மேற்கொண்ட இந்த அவமதிப்பான செயல் காரணமாக 80 வீதமான மூத்த குடிகள் சம்பந்தப்பட்டுள்ள அமைதியான போராட்டம் எந்த வகையிலும் இகழ்ச்சிக்கு உள்ளாகாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
69 லட்சம் மக்களின் வாக்குகளினால் ஆட்சிக்கு வந்த அரசாங்கம், அந்த 69 லட்சம் மக்களுடன் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்த 56 லட்சம் மக்களும் இணைந்து, அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இது ஜனநாயக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சந்தர்ப்பம். மக்களின் இந்த பலத்தை நீர்த்துப் போக செய்யவும் போராட்டகாரர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி, அவர்களின் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கலாம் என்பது எனது நம்பிக்கை.
மேற்படி சம்பவமும் அப்படியான ஒன்றாக இருக்கலாம். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு இரண்டு தீர்வுகள் மாத்திரமே உள்ளன.
1- அரச தலைவரும் அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கத்தின் ஊடாக தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி, நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும்.
2 - இதற்கு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாரில்லை என்றால், உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தி நிலையான அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும்.
தமது எதிர்பார்ப்புகளை நடைமுறைப்படுத்துவதற்காகவே மக்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்குகின்றனர். இது குறுகிய காலத்திற்கு வழங்கப்படும் அதிகாரமே அன்றி, அது அவர்கள் வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக்கொள்ளும் அதிகாரம் இல்லை என்பதை உணர வேண்டும்.
மக்களின் விருப்பம் இருக்கும் வரை அவர்களால் அதிகாரத்தில் இருக்க முடியும். மக்கள் நிராகரித்தால், அதிகாரத்தை உடனடியாக கைவிட தயாராக வேண்டும். ஜனநாயக பொறிமுறை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் நாகரீகமான நாடாக இருந்திருக்குமாயின் ஏற்கனவே அரசாங்கம் பதவியில் இருந்து விலகியிருக்கும்.
எனினும் எமது நாட்டின் நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரும்பாலான பிரதிநிதிகள் மக்களின் எதிர்ப்புகளுக்கு செவிமடுக்காது தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
பௌத்த மகா சங்கததினர் உட்பட சமய தலைவர்கள், சிவில் சமூகம், பொது மக்கள் கடுமையாக வற்புறுத்தி வரும் நிலையில், அதற்கு செவிகொடுக்காது தன்னிச்சையாக அதிகாரத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருப்பது மிகவும் அருவருப்பானது.
இதன் உச்ச சந்தர்ப்பத்தை நாம் நேற்று நாடாளுமன்றத்தில் காணமுடிந்தது. தாம் பொது மக்களுக்காக அல்ல ஒரு குடும்பத்திற்காக செயற்பட்டு வருபவர்கள் என்பதை அவர்கள் நேற்று நாடாளுமன்றத்தில் காண்பித்தனர்.
சுதந்திரக் கட்சி இந்தளவுக்கு கீழ் மட்டத்தை நோக்கி விழுந்துள்ளமை குறித்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் தமது அதிகார பேராசையையும் மக்களுக்கான அரசியலை செய்வதில்லை என்பதையும் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றனர்.
நேர்மையாக பொது மக்களுக்காக குரல் கொடுத்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்றால், தமது பதவிகளில் இருந்து விலகுவது கௌரவமானது என நான் இறுதியாக அனைத்து மக்கள் பிரதிநிதிகளிடமும் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
