அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் - மீண்டும் களமிறங்கத் தயார்!
நாட்டு மக்களுக்கு தொடர்ந்தும் சேவையாற்ற உள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கோட்டாபய அனுப்பி வைத்த பதவி விலகல் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளதாக இன்றைய தினம் நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோட்டாபய ராஜபக்ச தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்ட தகவல் அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகருக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தை இன்று நாடாளுமன்றம் கூடிய போது, அதன் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க வாசித்தார்.
மீண்டும் களமிறங்கத் தயாராகும் கோட்டாபய
அந்த கடிதத்திலேயே கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் எனவும் வாசிக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் கோட்டாபய மேலும் தெரிவித்திருப்பதாவது,
அதிபராக பதவியேற்ற 3 மாதங்களுக்குள் கொவிட் தொற்று உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. அந்த நேரத்தில் இலங்கையை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து திருப்தியடைவதாக கோட்டாபய குறிப்பிட்டுள்ளார்.
பொது முடக்கங்களே காரணம்
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பொது முடக்கங்களை நடைமுறைப்படுத்தியதன் மூலம், நாடு அந்நியச் செலாவணியை இழந்ததாகவும், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அவை பலன் தரவில்லை. நாட்டுக்கான சேவையை ஆற்ற எப்போதும் தயாராகவே இருக்கிறேன் எனவும் கோட்டாபய தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.