தமிழ்க் கட்சிகளின் முற்றுகைப் போராட்டம்- கோட்டாபய பதிலளிக்காமையின் விளைவே இது!
தமிழர் தாயகப் பகுதியில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த போராட்டம் அரச தலைவர் செயலக வளாகத்தில் இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன் போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில்,
காணி அபகரிப்பு குறித்து கோட்டாபய ராஜபக்ஷக்கு பல தடவைகள் அறிவித்த போதிலும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காணி அபகரிப்பு குறித்து கோட்டாபயவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு வருடத்திற்கு முன்பாகவே இரண்டு கடிதங்களை அனுப்பியதாகவும் எனினும் இதுவரையில் இந்த விடயம் குறித்து எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக இந்த விடயம் குறித்து எழுத்து மூலமாக அறிவித்தும் சமல் ராஜபக்ஷவுடன் சந்திப்புக்களை மேற்கொண்டும் தொடர்ச்சியாக காணி அபகரிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாகவே, இன்று போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.