காவல்துறையினர் மாணவர்களை வேட்டையாடுவதற்கல்ல- நெஞ்சை நிமிர்த்தி வேலை செய்யக் கூடிய துறைகளாக மாற்றுவோம்!
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கம் ஒன்றின் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,
நாடாளுமன்றம் நாடக மடமாக செயற்படுவது தொடர்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இருக்கும் வெறுப்பு மேலும் அதிகரிக்கும். நாடாளுமன்றத்தில் இருக்கும் அரசாங்கம், எதிர்க்கட்சி என அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மிகவும் கவலைக்குரிய நிலைமையில் நாடு தற்போது வங்குரோத்து அடைந்து விட்டது.
இந்த வங்குரோத்து நிலைமை காரணமாக நாட்டில் வாழும் 55 லட்சம் குடும்பங்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றன. வரலாற்றில் முதல் முறையாக எமது நாட்டின் சாதாரண மக்கள் வீதிகளுக்கு வந்துள்ளனர்.
உழைக்கும் மக்கள் தாம் பணிப்புரியும் இடங்களில் இருந்து வீதிக்கு வந்துள்ளனர். தொழிசார் நிபுணர்கள் தமது தொழிலை கைவிட்டு, அரசாங்கம் குறிப்பாக அரச தலைவர் மற்றும் பிரதமரை பதவி விலகி வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றனர்.
இப்படியான நிலைமையில் நாடாளுமன்றம் தனது பொறுப்பை நிறைவேற்றாது, வெறும் நாடக மடமாக செயற்படுவதால், இளைய தலைமுறையினர் மத்தியில் இருக்கும் வெறுப்பு மேலும் அதிகரிக்கும். இதனை எண்ணி நான் வெட்கப்படுகின்றேன்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லை என்பதை கண்பிக்கும் மிக அற்புதமான சந்தர்ப்பம் கிடைத்தது. இந்த அற்புதமான சந்தர்ப்பம் சில குழுவாத நபர்களின் வேலைத்திட்டம் காரணமாக இல்லாமல் போனது.
நாடாளுமன்றத்தின் பொதுவான நடத்தை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வருத்தப்படுகிறேன். அத்துடன் வெட்கப்படுகிறேன். நாட்டின் இளைய தலைமுறையினர் மற்றும் நாட்டின் பொது மக்கள் முனனெடுத்து வரும் போராட்டம் குறித்து மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் நாட்டை வஞ்சகமாக கொள்ளையிட்ட குடும்பத்திற்கு 55 லட்சம் குடும்பங்களை தமக்கு கீழ் வைத்துக்கொண்டு முன்நோக்கி செல்ல முடியாது. மக்களுக்கு பதுங்கு குழிகளையும் வேலிகளையும் அமைக்க முயற்சித்தாலும் உண்மையில் ராஜபக்ச குடும்பமே தற்போது பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றது.
அதேபோல் எதிர்க்கட்சி கூறும் நம்பிக்கை எப்படி அரசாங்கத்தின் மீது இருக்கும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தால், விலக வேண்டும். அரசாங்கம் பொறுப்பை ஏற்பது சம்பந்தமான பொறுப்பு எதிர்க்கட்சிக்கும் இருக்கின்றது. ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கத்தை பொறுப்பேற்க நாங்கள் தயார்.
ஒரு குடும்பத்திற்காக அரசியல்மயமாக்கப்பட்ட பாதுகாப்பு துறை அரசாங்கம் உலக சமூகத்திற்கு மத்தியில் வலுவிழந்து விட்டது. நாட்டில் மாத்திரமல்ல உலகத்திற்கு மத்தியிலும் அரசாங்கத்தின் விம்பம் என்பது முக்கியமானது.
அதேவேளை காவல்துறைமா அதிபர் மற்றும் சிரேஷ்ட காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பதவிக்கு வந்த நாளில் இருந்தே காவல்துறை திணைக்களத்தை மிகவும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டின் அடுத்த அரசாங்கத்தின் கீழ் காவல்துறை, முப்படை உட்பட பாதுகாப்பு தரப்பினர், புலனாய்வு சேவை ஆகியவற்றை சுயாதீனப்படுத்த வேண்டும். நாட்டின் பாதுகாப்பு துறை உட்பட அரச சேவை ஒரு குடும்பத்தை பாதுகாப்பதற்காக அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது.
சீருடை அணிந்த காவல்துறையினர், முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் எதிர்க்கட்சிகளை வேட்டையாடவோ, இளைஞர்களை தண்டிக்கவோ, பல்கலைக்கழக மாணவர்களின் பின்னால் விரட்டுவதற்காகவோ அல்ல.
அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக இருக்கின்றனர். இவற்றை நாட்டின் பாதுகாப்புக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாக மாற்ற நாங்கள் எதிர்காலத்தில் அர்ப்பணிப்புகளை மேற்கொள்வோம்.
சட்டத்திற்கு புறம்பான வகையில் ராஜபக்சவினரை பாதுகாக்கும் நடவடிக்கைகளை தவிர்க்குமாறு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம். அது சட்டவிரோதமானது என்பதே இதற்கு காரணம்.
அத்துடன் எதிர்காலத்தில் இந்த துறைகளை சுயாதீனமாக நெஞ்சை நிமிர்த்தி வேலை செய்யக் கூடிய துறைகளாக மாற்றுவோம் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
