கொந்தளிக்கும் தென்னிலங்கை- அலரி மாளிகைக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கானோர்!
அலரி மாளிகை பகுதியில் தற்போது ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மகிந்த தமக்கு வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச உள்ள அரசாங்கமொன்றே தமக்கு தேவையாக உள்ளது என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
“நாம் உங்களுக்கு வாக்கு வழங்கி உங்களை தெரிவு செய்தோம், எனவே நீங்கள் பதவியை இராஜினாமா செய்யக்கூடாது” என்பதே பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நாங்கள் வைக்கும் கோரிக்கையாக உள்ளது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மகிந்தவின் படத்தை பயன்படுத்தியே கோட்டாபய ராஜபக்ச வாக்குகளை பெற்றார். அவருக்கு விருப்பமான முறையில் எதனையும் செய்ய முடியாது. மகிந்தவை அரச தலைவர், பதவி விலக்குவதாக தெரிவித்திருந்தால் அவருக்கும் நாம் எதிர்ப்பு தெரிவிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துள்ள நிலையில் பெருந்திரளானோர் அலரி மாளிகைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன், பலர் அலரி மாளிகைக்குள் நுழைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
இன்றைய தினம் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள சந்திப்பில் பதவி விலகுவது குறித்து பிரதமர் மகிந்த இறுதித் தீர்மானம் எடுக்க உள்ளதாக கூறப்படும் நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.