நாடளாவிய ரீதியான போராட்டம் - வடக்கில் பாரிய நடவடிக்கை!
சிறிலங்கா சுகாதாரத் துறையைச் சேர்ந்த 33 தொழிற்சங்கங்கள் இன்று பணி விலகல் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் நாளை காலை வரை இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கம் போராட்டத்திற்கான தீர்வை வழங்காத பட்சத்தில், எதிர்வரும் நாட்களில் பாரிய தொடர் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய பணி விலகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பணி விலகல் போராட்டம்

வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களும் இன்றைய அடையாளப் பணி விலகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணி விலகல் காரணமாக வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆய்வகப் பிரிவு உள்ளிட்ட ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்றைய பணி விலகல் போராட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்தின் முறையற்ற வரிக் கொள்கைக்கு எதிராக நாளை முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
பொதுமக்கள் இன்னல்

இந்நிலையில் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர்களும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் வைத்தியசாலைக்கு வருகைதந்த நோயாளிகள், பொதுமக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
பொதுமக்கள் நீண்டநேரமாக வரிசையில் காத்திருந்தமையையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
இதேவேளை முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு முன்பாக பாரிய பணி விலகல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நோயார்களில் நலனில் அக்கறை கொண்டு பணியாற்றவேண்டிய பொறுப்பும் கடமையும் தமக்கு உள்ளதால் சிறிலங்கா அரசாங்கம் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க போராட்டம்

மேலும் சுகாதாரத் தொழிற்சங்கத்தின் ஒருநாள் அடையாள பணி விலகல் வவுனியாவிலும் இன்று முன்னெடுக்கப்பட்டது. வைத்தியர்கள் மற்றும் தாதியர் தொழிற்சங்கங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களாலும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



