இலங்கைக்கான வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்
இலங்கையில் வாகன இறக்குமதி மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதற்கு அமைய, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த காலப்பகுதியில் வாகன இறக்குமதிக்காக 1,007.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்கான வெளிநாட்டு பிரிவு செயல்திறன் அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி
இந்த ஆண்டு ஒரே மாதத்தில் அதிகபட்ச வாகன இறக்குமதி செலவு கடந்த ஓகஸ்ட் மாதம் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில் அதற்காக 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் நாட்டிற்குள் வாகன இறக்குமதிக்காக மேற்கொள்ளப்பட்ட செலவு விபரம் இவ்வாறு அமைந்துள்ளது.
ஜனவரியில் 29.1 மில்லியன் அமெரிக்க டொலர்களும், பெப்ரவரியில் 22.3 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மார்ச்சில் 54.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஏப்ரலில் 145.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், மேயில் 125.2 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜூனில் 169.6 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஜூலை 206.0 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஓகஸ்டில் 255.7 மில்லியன் அமெரிக்க டொலர்களும் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
