தமிழர்களுக்கான சுதந்திரம் தொடர்பில் சிங்கள மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று வவுனியாவில் கடந்த 1812 வது நாளாக தொடர்போராட்டம் மேற்கொண்டு வரும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று இடம்பெற்ற ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,
பயங்கரவாதச் சட்டத்தை நீக்குவதற்கு ஜி.எஸ்.பி பிளஸைப் பயன்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்தி ஒரு கடிதம் அனுப்பியுள்ளோம். எமது பிள்ளைகள் சிறிலங்கா இராணுவத்தினரால் கைது செயய்ப்பட்டதற்கு தற்போதைய பயங்கரவாதச் சட்டமே பிரதான காரணமாகும்.
பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களாகிய நாங்கள் பணத்தையோ இறப்புச் சான்றிதழையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்பதை நீதி அமைச்சரிடம் கூற விரும்புகிறோம்.
எங்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மட்டுமே நீதி மற்றும் பொறுப்புக்கூறலை எமக்கு வழங்க முடியும். இதேவேளை சிங்கள மக்களின் சுதந்திர தினத்தை நாம் எதிர்க்க விரும்பவில்லை.
தமிழர்களுக்கு சுதந்திரத்தை வழங்குவதற்கு சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம். ஒடுக்குமுறையில் இருந்து சுதந்திரத்தை அனுபவிக்கும் விடயத்தை அவர்கள் தமிழர்களுக்கும் வழங்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளும் தமது உறவுகளுடன் மகிழ்வுடன் வாழ்வதை அவர்கள் அங்கீகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.