பலாலி-இந்தியா விமான சேவை தொடர்பில் சிறிலங்காவிற்கு அழுத்தம் கொடுக்கும் இந்தியா - வெளியான தகவல்!
இந்தியா, இலங்கைக்கு வழங்கியுள்ள கடன் வசதியின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பதை துரிதப்படுத்துமாறு அழுத்தங்களை கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தென்னிலங்கை இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
இதனடிப்படையில் சிறிலங்கா அரசாங்கம், அடுத்த மாத இறுதிக்குள் யாழ் பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகளை ஆரம்பிக்க தயாராகி வருகிறது.
அரசியல் அழுத்தத்தின் அடிப்படையிலேயே நடவடிக்கை
இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான விமான சேவைகளை ஊக்குவிக்கும் செயலுக்கு பதிலாக அரசியல் அழுத்தங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது உறுதியாகியுள்ளது எனவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுங்க திணைக்களத்தின் அதிகாரிகளை பலாலி விமான நிலையத்தில் பணியில் அமர்த்தும் நடவடிக்கையாக அவர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மீண்டும் சேவை ஆரம்பம்
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து ஏற்கனவே இந்தியாவுக்கான விமான சேவைகள் நடத்தப்பட்டு வந்ததுடன் கொரோனா தொற்று நோய் காரணமாக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், மீண்டும் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.