ஈரானிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு சிறிலங்கா கையாளும் இராஜதந்திரம்!
தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளதோடு, இது தொடர்பிலான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
எரிபொருள் இறக்குமதிக்காக ஈரானுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகையை செலுத்துவதற்காகவே சிறிலங்கா - ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்யவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில், சிறிலங்கா பெருந்தோட்டத்தறை அமைச்சர் ரமேஸ் பத்திரண மற்றும் ஈரானின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதி அமைச்சர் அலிரெஸா பேமன்பெக் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளனர்.
இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தினால், ஈரானின் தேசிய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டிய, 250 மில்லியன் டொலருக்கும் அதிகமான நீண்டகால கடனைத் தீர்ப்பதற்கான பொறிமுறையை தயாரிப்பதற்கும் இந்த உடன்படிக்கை மூலம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எரிபொருள் கடனுக்காக தேயிலையை ஏற்றுமதி செய்வது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டளவில், ஈரானின் சந்தையில் 47 சதவீதமாக காணப்பட்ட இலங்கையின் தேயிலைத்துறை, 2020ஆம் ஆண்டில் 25 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
கொடுப்பனவுகள் மற்றும் ஈரான் ரியாலின் பெறுமதி வீழ்ச்சி என்பன இதற்கான காரணமாகும் என சிறிலங்கா பெருந்தோட்டத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தற்போது புரிந்துணர்வு உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டுள்ளதன் மூலம், இலங்கையின் தேயிலையை ஈரானுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யக்கூடியதாக இருக்கும் என பெருந்தோட்டத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 2012 இல் அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததன் மூலம், வங்கி முறை மூலம் பணம் செலுத்துவதற்கான அங்கீகரிக்கப்பட்ட வழிமுறை எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்கள் ஈரானிய கொள்வனவாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
தற்போது இடைத்தரகர் நாடுகள் மூலம் பணம் செலுத்தப்படுவதோடு இதுவும் பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் ஈரானும் உள்ளடங்குவதாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கை தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஈரான் எப்போதும் தாராளமாக உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.