பிரதேச பிரிவினையை விடுத்து தமிழர் தேசத்திற்காக ஒன்றிணைவோம்!
வடக்கு, கிழக்கு என்ற எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாசார மாணவர் ஒன்றியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலி வடக்கில் 2467 ஏக்கர் பரப்பளவினை சிறிலங்கா இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனை மக்கள் விடுவிக்க கோரி நீதிமன்றத்திலே போராடிக்கொண்டிருக்கின்ற போதிலும் தற்போது அந்த இடத்தினை இராணுவம் வசப்படுத்துவதற்காக நடவடிக்கைளை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கிற்கான பயணம்

இதனை நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. மாணவர் சக்தியாக நாங்கள் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். வடக்கில் இருந்து கிழக்கும், கிழக்கில் இருந்து வடக்குக்குமாக இன்றும் இந்த பயணம் தொடர்கிறது.
இன்று முதல் வடக்கு, கிழக்கு என்று எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதை கூறிக்கொள்கிறேன்” “எங்கள் இனம், எங்கள் உரிமை”, “எங்கள் நிலம் எங்கள் உரிமை” எனவும் தெரிவித்துள்ளார்.