படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் தில்காந்திக்கு சமர்ப்பணம்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இவ் ஆண்டு அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.
மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த செல்வி நவரத்னம் தில்காந்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கைகள் துறையில் கல்விகற்று ஊடகவியலில் திறமைச் சித்தி பெற்று யாழ். பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்த போது அண்மையில் உடல் நிலைக் குறைவால் உயிரிழந்திருந்தார்.
அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” அறிவிக்கப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி பட்டமளிப்பு விழா, நாளை 03.03.2022 மற்றும் 04.03.2022 மற்றும் 05.03.2022 ஆகிய தினங்களில் நடைபெறுகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைககழகதத்தின் பட்டமளிப்பு விழாவின் போது கடந்த நான்கு ஆண்டுகளாக “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாக கல்விகற்றுக் கொண்டு ஊடகவியலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அதிகாலை 5 மணியளவில் அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் 2004 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களால் முன்னெடுக்கப்படும் “நிலா நிதியம்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
இந்நிதியத்தின் அங்குரார்ப்பண சான்றிதழ் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலக்சனின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலின் போது யாழ் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதியிடம் கையளிக்கப்பட்டு பின்னர் யாழ் பல்கலைகழகத்திடம் நிதி கையளிக்கப்பட்டது.
இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் நான்காவது வருடமாக தற்போது வழங்கப்படவுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாவது தக்கப்பதக்கத்தினை யாழ்ப்பாணம் உடுவிலைச்சேர்ந்த மாணவியான செல்வி அன்ட்கேசிகா லோறன்ஸ் ராஜ்குமாரும் 2020 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கோண்டாவிலைச் சேர்ந்த யாழ் பல்கலை மாணவியான தினேஸ் விஜயதர்சினியும் 2021 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்டத்தின் சுதுகங்கை எனும் ஊரைச் சேர்ந்த சேர்ந்த செல்வி முனியப்பன் துலாபரணியும் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ் ஆண்டுக்கான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கத்தினை மொனராகலை மாவட்டத்தில் மரகலை தோட்டம் என்னும் கிராமத்தைச் சேர்ந்த நவரத்னம் தில்காந்தி பெற்றுக்கொள்ளவிருந்த நிலையில் அவர் உடல் நலக்குறைவால் இயற்கையெய்தியிருந்தார். இந்நிலையில் அவருக்கு இத் தங்கப்பதக்கம் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது.