நாட்டை சீரழித்து வன்முறையை கட்டவிழ்த்துவிட்டவர்கள் விடுதலைப்புலிகளும் ஜேவிபியினருமே!
பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்து, வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களே காரணம்
அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே.
மக்களைப் பாதுகாப்பதே அதிபரின் கடமை
சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர்.
எனவே, மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்.
மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் அதிபரின் கடமையாகும்” என்றும் அவர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.