மைத்திரியை அரசாங்கத்திலிருந்து வெளியேற்றுவதே சிறந்தது!
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவை காப்பாற்றி வைத்திருப்பதே அரசாங்கம் செய்யும் பெரிய தவறு என இராஜாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் சம்பந்தமாக தேவையான நடவடிக்கைகளை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச விரைவில் எடுப்பார் எனவும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை தொடர்பிலும் கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், அவரை காப்பாற்றி வைத்திருப்பதுதான் பெரிய தவறு. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் எங்கள் மீது கோபத்தில் உள்ளனர். தேவையானவற்றை செய்தால் முடிந்து விடும். நீண்டகாலம் செல்லும் முன்னர் கோட்டாபய அதனை செய்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
சுதந்திர கட்சி வெளியேற்றப்பட்டால், அரசாங்கத்தின் இருப்புக்கு அழுத்தங்கள் ஏதுவும் ஏற்படுமா? எனவும் ஊடகவியலாளர்கள் கேளிவியெழுப்பியுள்ளனர்.
அதன் போது, இல்லை. அரசாங்கத்தின் இருப்புக்கு எப்படி அழுத்தங்கள் ஏற்படும்? அப்பத்தை சாப்பிட்டு விட்டு, தப்பிச் சென்ற பின்னர் நாங்கள் புதிய கட்சியை ஆரம்பித்தோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்று மகிந்த ராஜபக்சவை பிரதமராக பதவிக்கு கொண்டு வந்து, அவரது சகோதரரை அரச தலைவர் ஆக்கியுள்ளோம்.
மீதமுள்ளவற்றை செய்வதற்கு அவர்கள் தேவையா? எனவும் கேள்வியெழுப்பியு்ளளார். அவர்கள் அரசாங்கத்தில் இருப்பதுதான் பாதிப்பு. விலகிச் சென்றால் மிக இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.