கோட்டாபயவிடம் கையளிக்கப்பட்டது இறுதி அறிக்கை!
'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணியின் இறுதி அறிக்கை சிறிலங்கா அரச தலைவரிடம் கையளித்துள்ளதாக அரச தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற அரச தலைவர் செயலணியானது 2021 ஒக்டோபர் 26 ஆம் திகதி கோட்டாபய ராஜபகசவினால் ஸ்தாபிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் 28ஆம் திகதி 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் பதவி காலம் நிறைவடைந்திருந்த நிலையில், மீண்டும் கால நீடிப்பு செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் இறுதி அறிக்கை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் தலைமையில் செயலணி
13 பேர் கொண்ட இந்த செயலணியின் தலைவராக பொதுபல சேனாவின் பொது செயலாளர் கலகொடே அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார்.
இலங்கைக்குள் 'ஒரு நாடு, ஒரே சட்டம்' மற்றும் சட்ட வரைவைத் தயாரித்து, நீதி அமைச்சினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் திருத்தங்களை ஆய்வு செய்து பொருத்தமான திருத்தங்கள் உள்ளதா எனத் தீர்மானித்து பொருத்தமானதாகக் கருதப்படும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதை நோக்காகக் கொண்டு இந்த செயலணி உருவாக்கப்பட்டது.
செயலணியின் அறிக்கை
அதன்படி, பொது மக்கள் மற்றும் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவின் கருத்துக்களை இந்த செயலணி பெற்றிருந்தது.
இந்தநிலையில், குறித்த செயலணி சேகரித்த தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதி அறிக்கை அரச தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
