இன்னல்களுக்குள் சிக்கப்போகும் பாடசாலை மாணவர்கள் - நாடாளுமன்ற உறுப்பினர் பகிரங்கம்.
சிறிலங்கா அதிபரின் செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க செஸ் வரியை அதிகரித்ததன் மூலம் பாடசாலை மாணவர்கள் பெரும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றில் தன் உரையின்போது தெரிவித்திருந்தார்.
மேலும், 630 அத்தியாவசிய பொருட்களுக்கான செஸ் வரியை அதிகரித்து வர்த்தமானியை வெளியிட்டதன் மூலம் பாடசாலை உபகரணங்களுக்கு நூற்றுக்கு 30வீதம் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார்.
விலை அதிகரிப்பு
மேலும், “10 ரூபாவிற்கு கொள்வனவு செய்த பென்சில் ஒன்றினை தற்போது 40 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய வேண்டும்.
பென்சில் சீவும் கருவி, பேனை, ஆகியவற்றை 180 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் சீ ஆர் பயிற்சிப் புத்தகம் ஒன்று 800 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இதன் விளைவாக பாசாலை மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது”எனவும் கிரியெல்ல கூறியிருந்தார்.
உணவின் விலை
இதன்போது குறுக்கிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, குறித்த விடயம் தொடர்பில் விளக்கமளிக்க சந்தர்ப்பம் அளிக்குமாறு கோரினார்.
அதற்கமைய அவர் “எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளில் தன்னிறைவு இன்மையினால், வெளிநாடுகளிலிருந்து குறித்த பொருள் இறக்குமதி செய்யப்படுகின்ற போது அதற்கு விதிக்கப்படும் வரியே செஸ் வரியாகும். செஸ் வரி அதிகரிப்பினால் உணவின் விலை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் உணவு தொடர்பான எந்தவொரு பொருளுக்கும் செஸ் வரி விதிக்கப்படவில்லை அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளை பிரிதொரு நாட்டிலிருந்து இறக்குமதி செய்வதினை நிறுத்துவதற்கான தேவை ஏற்பட்டது.
பென்சில், பேனை, பயிற்சி புத்தகங்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், தேசிய உற்பத்தியை அதிகரிக்க நாங்கள் உதவி செய்யவும் திட்டங்களை கொண்டுள்ளோம் என்பதனை புரிந்துக்கொள்ள
வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
