நாடாளுமன்ற உறுப்புரிமைக்காக சஜித் தரப்பில் பிளவை ஏற்படுத்தும் ஐ.தே.க? அம்பலமாகிய தகவல்!
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் நான்கினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்குவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சிக்கு தற்போது நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மாத்திரமே இருக்கின்றது. அந்த பதவியை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வகித்து வருகிறார்.
இந்நிலையிலேயே ஆளும் தரப்புடன் ஐக்கிய தேசிய கட்சி இவ்வாறான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பொதுஜன பெரமுனவின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளும் ஐக்கிய தேசிய கட்சிக்க வழங்கினால், அதற்கு ஈடாக நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதி ஒன்றையும் ஐக்கிய தேசியக் கட்சி வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த அரசியல் வேலைத்திட்டத்தில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த இணக்கத்தின் அடிப்படையிலேயே அவர் இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி சம்பவத்தின் பல குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக நீதியான சமூகத்திற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தகவல் வெளியிட்டுள்ளார்.
மேலும் நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை வழங்கினால், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது 10 பேரை இணைத்துக்கொண்டு தேசிய அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி வாக்குறுதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன தனக்குரிய தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் நான்கினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்க வேண்டுமாயின் பொதுஜன பெரனமுனவின் நான்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் எனவும் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.