நாடாளுமன்றில் சபாநாயகருக்கு அச்சுறுத்தல்- சபைக்கு பொருந்தாத வார்த்தைகளால் அமளிதுமளி!
சிறிலங்கா நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சபைக்கு பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் ஏற்பட்ட நீண்ட வாக்குவாதம் காரணமாக சபையில் இன்று பெரும் அமளி ஏற்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார நேற்று சபாநாயகரிடம் முறைப்பாடு ஒன்றை செய்ய சென்ற போது, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் உள்ளிட்ட ஆளும் கட்சியினர், அவரை அச்சுறுத்தியதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட சபை முதல்வரான அமைச்சர் தினேஷ் குணவர்தன, மனுஷ நாணயக்கார, சபாநாயகருக்கு அருகில் சென்று அச்சுறுத்தியதை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் போதே ஆளும் கட்சியினருக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையில் சூடான வாக்குவாதங்கள் ஏற்பட்டன.