சிறிலங்கா நாடாளுமன்றில் வார்த்தைகளால் துன்புறுத்தப்படும் பெண் உறுப்பினர்கள்!
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள், வார்த்தை ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சுதர்சினி பெர்ணாண்டோ புள்ளே இது தொடர்பில் சபாநாயகருக்கு கடிதமொன்றையும் அனுப்பியுள்ளார்.
சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவ்விடத்திலேயே துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் ஆயின் அது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு சீரழிவை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சிறிலங்காவின் ஆளும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி தமக்கு எதிராக தெரிவித்த கருத்து தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ரோஹினி கவிரத்ன,
ஜானக திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்தானது தம்மை மாத்திரம் குறிவைக்கும் ஒன்று அல்லவெனவும் அது ஒட்டுமொத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிரானது எனவும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திலோ அல்லது சமூகத்தில் வேறு எந்த இடத்திலோ இவ்வாறான கருத்துக்களை வெளியிடக் கூடாது என நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் உட்பட அனைத்து நபர்களும் இவ்வாறான கருத்துக்களை எதிர்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சியினால் வெளியிடப்பட்ட கருத்துக்களின் தீவிரம் குறித்து அவைத்தலைவருக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கரிசனையை அவைத் தலைவர் புறக்கணித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். “
சபாநாயகர் அலுவலகத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில், இந்த விடயம் உள்ளதாகவும் ஆகவே தகுந்த நபர்களை மாத்திரம் தலைவராக நியமிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் நாளைய தினம் அறிவிப்பொன்றை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபையில் அறிவித்துள்ளார்.