நாம் வீழ்ந்து விடவில்லை - இன்றும் எமது ஆட்சியே; மகிந்த இறுமாப்பு!
ராஜபக்சக்கள் வீழ்ந்துவிடவில்லை. அவர்கள் பதவிகளிலிருந்து விலகி நின்று அரசை வழிநடத்துகின்றார்கள் என்பதே உண்மை என பொதுஜன பெரமுனவின் தலைவர் மகிந்த ராஜபக்ச பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டை இப்போதும் நாம்தான் ஆட்சி செய்கின்றோம். எமது கட்சிதான் இப்போதும் நாட்டை ஆள்கின்றது எனவும் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“நாடு வங்குரோத்து அடைந்தமைக்குக் கோட்டாபய ராஜபக்சவோ அல்லது ராஜபக்சக்களோ காரணம் அல்லர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமைக்கு நாட்டை உலுக்கிய கொரோனாப் பெருந்தொற்றே பிரதான காரணம்.
ரணில் எமது பக்கமே
இதைப் புரிந்தும் புரியாதவர்கள் போல் எம் மீது சிலர் வசைபாடி புலம்பித் திரிகின்றார்கள். ஆனாலும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் எமது பக்கமே நின்று பணியாற்றுகின்றார்.
இவ்வாறான நிலையில், தற்போது நாட்டின் நெருக்கடி நிலைமைக்குத் தலைமை தாங்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க தான்.
அதில் மாற்றுக் கருத்து இல்லை.
அவரும் நாங்களும் இணைந்து நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்போம். இதற்குக் கட்சி, பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.