கிளிநொச்சியில் காவல்துறையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்- சந்தேக நபர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
காவல்துறை மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களை கைது செய்யதுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டிருந்தனர். அதனடிப்படையில், மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கடந்த ஒக்டோபர் 4ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாறு பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை சமரசம் செய்யச் சென்ற தர்மபுரம் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் காவல்துறை அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய காவல்துறையினரின் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, சந்தேக நபர்கள் இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.