பொலிஸ் அதிகாரிகளின் "தீவிரவாத" கருத்துக்கள் மீது சர்வமத தாக்குதல்
நூற்றுக்கு மேற்பட்டோரின் உயிரைப் பறித்த, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் பெயரிடப்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அதிகாரிகள் குழு விசாரணை நடவடிக்கைகளுக்கு மதவாத மற்றும் இனவாத சாயம் பூசுவதற்கு முயற்சிப்பதாக சர்வமத தலைவர்கள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் குழு சமீபத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தாம் சிங்கள பௌத்தர்களாக இருப்பதால், தம்மை குற்றவாளிகளாக காட்ட முயற்சிப்பதாக தெரிவித்திருந்தனர்.”
பௌத்த, கத்தோலிக்க, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்கள் ஓகஸ்ட் மாதம் 24ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளனர்.
குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்ட சில பொலிஸ் அதிகாரிகளுடன் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னகோன் ஆகியோர் பௌத்த தேரர்களை சந்தித்து, தாம் பௌத்தர்கள் என்பதாலா தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பினர்.
குறித்த கருத்தானது "உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை இனவாத மற்றும் மதவாத நிலைக்கு தள்ளும் ஒரு மோசமான நோக்கத்தை கொண்டிருப்பதாக தெரிகிறது." என மதத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
"இதுபோன்ற தீவிரவாத கருத்துகளுக்கு மத்தியில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து எந்த அரசியல் தலையீடும் இல்லாமல் நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்." என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர்களான நந்தன முனசிங்க மற்றும் தேசபந்து தென்னக்கோன் ஆகியோர் மல்வத்து மற்றும் அநுராதபுரம் அடமஸ்தான தலைமை பீடாதிபதிகளை சந்தித்தமை குறித்து விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரச வாகனங்களில், சீருடையுடன் தமது பிரதேசத்திற்கு வெளியே சென்று, பீடாதிபதிகளை சந்தித்து, ஊடகங்களின் முன்னிலையில் மிகவும் ஒழுக்கேடாக செயற்பட்டுள்ள, கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.