பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்காத ரணில்! பதவியிலிருந்து நீக்கப்படலாம் என தகவல்
அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படாத போதிலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அரச வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க ரணில் விக்ரமசிங்க தவறியுள்ளதன் காரணமாக அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து முன்னாள் நிதியமைச்சர் அலி சப்றி மீண்டும் நிதியமைச்சராக நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.
மீண்டும் அலிசப்றி
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் நிதியமைச்சராக பதவி வகித்த பசில் ராஜபக்ச பதவி விலகியதை அடுத்து, அலி சப்றி நிதியமைச்சராகவும் நீதியமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த மே மாதம் 9 ஆம் திகதி மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து முழு அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளும் இரத்தானது.
பின்னர் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டது.
நீண்டகாலமாக நிதியமைச்சர் நியமிக்கப்படாத நிலையில், ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில், தற்பொழுது ரணில் விக்ரமசிங்க நீக்கப்பட்டு நிதியமைச்சராக அலி சப்றி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
