அனைத்து கட்சிகளுக்கும் பௌத்த பீடம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 9 ஆம் திகதி பாரிய மக்கள் எழுச்சி இடம்பெற்ற நிலையில் சிறிலங்கா அதிபர் மாளிகை மற்றும் செயலகம் என்பவற்றை மக்கள் கைப்பற்றியிருந்தனர்.
பாரிய போராட்டத்தினால் மாற்றம்
அதனையடுத்து கோட்டாபய தனது குடும்பத்துடன் தப்பிச் சென்று திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்திருந்தார். பின்னர் நாட்டை விட்டு வெளியேறும் நோக்குடன் விமானநிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் அங்கு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான விமானத்தில் மாலைதீவுக்கு சென்று அடைக்கலமடைந்தார். அதனையடுத்து அங்கிருந்து நேற்றைய தினம் சிங்கப்பூர் சென்றிருந்தார்.
அங்கு சென்றதையடுத்து தனது பதவி விலகல் கடிதத்தை மன்னஞ்சல் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் அந்த கடிதத்தின் மூலப்பிரதி இன்று விமானம் மூலம் இராஜதந்திரி ஒருவர் மூலம் சிறிலங்காவிற்கு கொண்டுவரப்பட்டது.
உத்தியோகபூர்வ அறிவிப்பு
இவ்வாறான நிலையில், இன்று சபாநாயகர் ஊடகங்கள் முன்னிலையில் பதவி விலகல் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக புதிய பதில் அதிபர் ஒருவர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதன் மூலம் சர்வகட்சி அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட்டவுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அனைத்து கட்சிகளும் இணைந்து சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.