திருடர்களுடன் கூட்டணிவைத்துக் கொண்டு ரணிலால் ஊழலை ஒழிக்க முடியுமா!
ஊழலுக்கு எதிரான எந்தவொரு சட்டமூலத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி தமது முழுமையான ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“ஆசியாவிலேயே சிறந்த ஊழலுக்கு எதிரான சட்டமூலத்தை கொண்டு வரவுள்ளதாக அதிபர் தெரிவித்துள்ளார். அவ்வாறான சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் நாங்கள் கடந்த மே மாதமே முன்வைத்தோம்.
ஊழலுக்கு எதிரான சட்ட மூலம்
ஆளும் தரப்பாக இல்லாமல், தனி நபர் பிரேரணையாக அதனை தாக்கல் செய்தேன். நாங்கள் கொண்டு வந்த சட்டமூலங்கள் தொழிற்சங்கங்களை நசுக்கும் விதமாகவோ அல்லது இளைஞர்களை கைது செய்யவோ அல்லது மக்களின் அடிப்படை உரிமைகளை சீர்குலைக்கும் வகையிலோ அமைந்திருக்கவில்லை.
திருடர்களைப் பிடிப்பதே இந்த சட்ட மூலம் கொண்டு வரப்படுவதன் நோக்கமாக இருந்தால் ஏலவே அரச கட்டமைப்பில் போதுமான நிறுவனங்கள் உள்ளன. ஊழல் அதிகம் இருந்ததால்தான் இந்தநாடு வங்குரோத்து நிலைக்கு வந்தது என்பதை நாம் அறிவோம்.
தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்தில் பெருமளவான வழக்குகள் குவிந்து கிடக்கின்றன. திருடர்களுடன் இருந்து கொண்டு ரணில் விக்ரமசிங்கவால் இதனை எவ்வாறு மேற்கொள்ள முடியும். இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றினாலும் அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவு
ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மூலத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்தி என்ற வகையில் பூரண ஆதரவு வழங்குவோம் என்று கூறுகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அரசாங்கத்தில் இருந்து அங்கும் இங்கும் தாவுவதாக பேசப்பட்டு வருகின்றது.
2020 ஆம் ஆண்டு இந்த அரசாங்கம் அமையும் போது அரசாங்கத்தில் 157 நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிபர் தேர்தலின் போது 135 நாடாளுமன்ற உறுப்பினர்களும், கடந்த பாதீட்டின் போது இது 123 ஆக குறைந்துள்ளது என்பதை நாம் தெளிவாக கூறுகின்றோம்.
அதாவது இந்த அரசாங்கத்தில் இருந்து 34 பேர் எதிர்க்கட்சியில் வந்து அமர்ந்திருக்கிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தியின் வாக்குகளைப் பெற்றவர்கள் அரசாங்கத்தில் ஒரு சிலர் இருக்கிறார்கள், ஆனால் முன்னதாக சென்ற ஐந்தாறு பேர் திரும்பி வந்துள்ளனர்.
இன்று அரசாங்கத்தின் பக்கமே பிரச்சினையாக இருக்கிறது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் அல்ல என்பதை நினைவுப்படுத்துவதாகவும் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
