வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பில் ரணிலின் வாக்குறுதி!
தமிழர் தாயகப் பகுதிகளில் கையகப்படுத்தப்படும் காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஒவ்வொரு மாகாணத்திலும் ஒம்பூஸ்மன் ஒருவரை நியமித்து, ஆராய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா அதிபரிடம் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கோரிய நிலையில், அவ்வாறு நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறிலங்கா அதிபருக்கும் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவாத்தை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
“சிறிலங்கா அதிபருடன் இடம்பெற்ற சந்திப்பு பெரிதாக நன்மை இல்லா விட்டாலும் சில விடயங்கள் ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது.
அதேவேளை, பௌத்தமயமாக்கல் தொல்பொருள் திணைக்களம் என்ற போர்வையில் தமிழ் மக்களுடைய காணிகள் அபகரிப்பது தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் கைதிகள் விடுதலை
மேலும் வன இலாகா கைப்பற்றியுள்ள காணி சம்பந்தமாக அதிபரிடம் எடுத்துக் கூறப்பட்ட நிலையில், 1985 க்கு பின்னர் வன இலாகாவினால் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மக்களின் தேவைகளுக்கு விடுவிக்க அதிபர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்தார்.
இராணுவம் வசமுள்ள தமிழ் மக்களுடைய காணிகளை விடுவிப்பது, சிறைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் எஞ்சியோரையும் விடுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரட்ணம் மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அதிபர் கேள்வி எழுப்பினார்.
நன்மை பயக்காத சந்திப்பு
இதன்போது பதில் அளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பெரும்பாலான தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியோரையும் விடுவிப்பதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பல்வேறுபட்ட பிரச்சனைகள் தொடர்பில் சிறிலங்கா அதிபருடன் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த சந்திப்பு பெரிதாக நன்மை பயக்காவிட்டாலும் சில விடயங்களில் ஆறுதல் அடையக் கூடியதாக இருந்தது” எனவும் அவர் தெரிவித்தார்.
