தேநீர் கடையை நடத்தக் கூட லாயக்கற்றவர்கள் ஜே.வி.பியினர் : அமைச்சர் மகிந்த அமரவீர தாக்கு
ஒரு நாட்டை ஆளுவதை விடுத்து ஒரு தேநீர் கடையை கூட நடத்த ஜே.வி.பி விற்கு முடியாது. இந்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பாடத்தை அவர்கள் கற்றுக் கொள்வார்கள் என அமைச்சர் மகிந்த அமரவீர(mahinda amaraweera) தெரிவித்துள்ளார்.
வெல்லவாயயில் நேற்று (16) முன்தினம் பிற்பகல் நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மகிந்த அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;
‘இயலும்’ என்று செய்து காட்டிய ரணில்
“தேர்தலின் வெற்றி அலை, தேர்தல் பிரசாரத்தின் முடிவிலேயே தொடங்குகிறது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு முன்கூட்டித் தயாராகிய அனைவரும் தோற்றனர். கடைசி நிமிடத்தில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் இன்றைய நிலையில், மொனராகலை மட்டுமன்றி முழு இலங்கையினதும் ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) பெற்றுள்ளார் என்றே கூற வேண்டும்.
அத்துடன், இன்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் 38 பேரில் யார் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முன்வந்தனர் என்பது மக்களுக்குத் தெரியும். யாராலும் முடியாது என்று சொன்னதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ‘இயலும்’ என்று செய்து காட்டிவிட்டே உங்கள் முன்வந்துள்ளார். குழுவாக, நாங்கள் அவரை ஆதரிக்க முடிவு செய்தோம். ஏனெனில் அவருக்கு ‘இயலும்’ என்று எங்களுக்குத் தெரியும்.
விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு
நான் விவசாய அமைச்சராக அமைச்சுப் பொறுப்பை ஏற்றபோது விவசாயிகளுக்கு உரம் இல்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக ஜனாதிபதி பதவியை ஏற்று விவசாயிகளுக்கு உரம் வழங்க ஏற்பாடு செய்தார். அதனால், இன்று நாடு அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளது. நெல் விவசாயிகளுக்கு மட்டுமன்றி மற்ற விவசாயிகளுக்கும் உர மானியம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பாரம்பரிய விவசாயத்தில் இருந்து கடந்து, நவீன விவசாயத்தை கிராமத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விவசாயிகளுக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. விவசாயிகள் மாதம் ஒன்றுக்கு சுமார் 4 – 5 இலட்சம் ரூபா வரை வருமானம் ஈட்டும் வகையில் அரசாங்கம் திட்டத்தை தயாரித்துள்ளது.
நாட்டின் அழிவிற்கு இவர்களும் உடந்தை
சவால்களை ஏற்றுக்கொண்டால், அந்த சவாலை நாம் வெல்ல வேண்டும். மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்கிறோம். இன்று நாடு அழிந்துவிட்டது என்று சிலர் கூறுகின்றனர். இந்த அழிவுக்கு சஜித் பிரேமதாச(sajith premadasa) மற்றும் அநுரகுமார (anura kumara)ஆகியோரும் உடந்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
ஜே.வி.பி.யே அப்போது இந்த நாட்டை வங்குரோத்தாக்கியது. அன்று சுமார் 200 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை அழித்துள்ளனர். குறைந்த பட்சம் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவும் அவர்களுக்கு உரிமை இல்லை.
அவர்களுக்கு பாடம் புகட்டுவதற்காக அன்றி, இந்த நாட்டை வெற்றிபெறச் செய்யவே, காஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்..”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |