விகாரை அமைக்கும் நோக்கத்துடன் யாழிற்கு வந்தாரா மஹிந்த? மக்கள் ஒன்று கூடியதால் கைவிடப்பட்ட திட்டம்!
சிறிலங்கா பிரதமர் மஹிந்த ராஜபக்ச கந்தரோடை விகாரைக்கு வழிபடுவதற்காக செல்லவிருந்த தனது திட்டத்தை கைவிட்டுள்ளாரென தகவல் வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் மத ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்ட நிலையில் அதன் ஒரு அங்கமாக கந்தரோடை விகாரைக்கும் சென்று வழிபட தீர்மானித்திருந்தார்.
கந்தரோடை விகாரையில் பிரதமர் அடிக்கல் நாட்டுவதாக செய்தி வெளியான நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்களும் தமிழ் தேசிய மக்கள் முன்ணணியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீரென கந்தரோடை விகாரைக்கான தனது விஜயத்தை ரத்து செய்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பிரதமரது பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும் அங்கிருந்து விலகிச்சென்றமை குறிப்பிடத்தக்கது.






