இந்தியாவின் அசாமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : மக்கள் அலறியடித்து ஓட்டம்
இந்தியாவின் அசாமில் உள்ள குவஹாத்தி நகருக்கு அருகில் இன்று (14) ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடக்கு வங்காளத்திலும், அண்டை நாடான பூட்டானிலும் சுமார் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
பாதுகாப்பு தேடி பாய்ந்தோடிய மக்கள்
அசாம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலநடுக்கம் பதிவான உடனே மக்கள் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களிலிருந்து சாலைகளுக்கு வெளியே பாய்ந்து தங்கள் உயிரைக் காப்பாற்ற முயன்றனர்.
குறிப்பாக உயரமான கட்டடங்களில் வசித்தவர்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக அச்சமடைந்தனர். சிலர் வீடுகளில் இருந்த மின்விளக்குகள் குலுங்கியது, சுவர்கள் அதிர்ந்தது போன்ற அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு
இந்த நிலநடுக்கத்தால் இதுவரை எந்த உயிரிழப்பும், சொத்து சேதமும் ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. இருப்பினும் பல இடங்களில் போக்குவரத்து சீர்குலைந்தது.
பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் உடனடியாக மக்களை எச்சரித்து, பிந்தைய அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர். குறிப்பாக உயரமான கட்டடங்களில் இருப்பவர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
