அதிகரித்தது மருத்துவர்களின் வருமான வரி- மகிந்தவிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மருத்துவர்கள் உட்பட உயர் பதவிகளை வகிப்போர் மற்றும் தொழில்களில் ஈடுபடுவோரிடம் வருமான வரியை அறவிடும் வீதத்தை குறைக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதனடிப்படையில், தற்போது அறவிடப்படும் 24 வீத வரியை 12 வீதமாக குறைக்குமாறு அச்சங்கத்தின் தலைவர் மருத்துவர் அனுருத்த பாதெனிய, பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
மகிந்த ராஜபக்ச அரச தலைவராக பதவி வகித்த காலத்தில் மருத்துவர்கள் உட்பட உயர் பதவிகளை வகிக்கும் நபர்களிடம் 12 சத வீத வரியே அறவிடப்பட்டதாக கூறியுள்ள பாதெனிய, நல்லாட்சி அரசாங்கமே அதனை 24 வீதமாக அதிகரித்தது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆகவே அந்த வரியை மீண்டும் பழைய வீதத்திற்கு கொண்டு வருமாறும் கோரியுள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொதுஜன பெரமுன அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதற்காக பங்களிப்பை செய்த தொழிற்சங்கங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் பல்வேறு காரணங்களை முன்வைத்து அவ்வப்போது பணிப்புறக்கணிப்புகளையும் நடத்தி வந்தது.
எது எப்படி இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் வழங்கிய வரிச் சலுகையால் உயர் பதவிகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டு வருவோருக்கும் சலுகை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.