மனிதாபிமானமின்றி கடுமையாகத் தாக்கப்பட்ட பெண்கள் சிறுவர்கள் - உடன் விசாரணைக்கு கோரிக்கை!
சிறிலங்காவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த தென்னிலங்கைப் போராளிகளை நினைவு கூருவதற்காக காலி முகக்திடலில் ஒன்றுகூடிய அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு காரணமான காவல்துறை உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு ஊடக அமைப்பு ஒன்று காவல்துறைமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உதவி காவல்துறை அத்தியட்சகர் நளின் தில்ருக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காவல்துறைமா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
“முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மக்களின் நினைவேந்தல்களை சீர்குலைக்கும் வகையில் பல வருடங்களாக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயற்பட்ட காவல்துறையினர், தென்னிலங்கையில் கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பு காலி முகத்திடல் மைதானத்திற்கு வந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்டவர்களை துன்புறுத்தியதைக் காணமுடிந்தது.
பாரபட்சமற்ற விசாரணை

கோட்டை காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாகர லியனகே, உதவி காவல்துறை அத்தியட்சகர் நளீன் தில்ருக், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் ஏனையோரின் நடத்தை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை காவல்துறை விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குவதற்காக, அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த வேண்டும்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் மற்றும் அமைதிப் போராட்டத்தில் நுழைந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடையூறு விளைவித்ததோடு, கலந்து கொண்டவர்களை கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் நடத்தியதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன காவல்துறைமா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சுரிமை அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அதற்கு சந்தர்ப்பம் வழங்காதது மாத்திரமன்றி, அமைதியான குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் பாடசாலை மாணவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
துன்புறுத்திய காவல்துறையினர்

ஒரு குழந்தையுடன் தம்பதியரை உதவி காவல்துறை அத்தியட்சகர் நளின் தில்ருக் உட்பட காவல்துறை அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர், சிறுமியுடன் இருந்த தாயையும் துன்புறுத்தினர்.
மேலும், இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய ஒரு பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். மேலும் அமைதியான போராட்டக்காரர்களின் மற்றொரு குழுவும் கைது செய்யப்பட்டது.
காவல்துறையின் கெடுபிடியால் ஒரு வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அந்த குழந்தையின் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் அடிப்படை உரிமைகளை மட்டும் மீறவில்லை என காவல்துறைமா அதிபருக்கு நினைவூட்டும் இளம் ஊடகவியலாளர் சங்கம், காவல்துறை அதிகாரிகள் அடிப்படை உரிமைகளை மீறியது மாத்திரமன்றி சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான மாநாட்டு சட்டத்தின் கீழும், தண்டனைச் சட்டக் கோவையின் கீழுள்ள குற்றங்களும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை காணொளி காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன.
காவல்துறை உத்தியோகத்தர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் காவல்துறைமா அதிபரிடம் கோரும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தேவையான சாட்சியங்களை வழங்க முடியுமெனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.