விடுதலைப்புலிகளை மீளுருவாக்கல் - கைது செய்யப்பட்ட தமிழர் தாயகப் பகுதி இளைஞர்கள் உணவு தவிர்ப்பில்!
கொழும்பு மகசின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்தாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் தாயகப் பகுதியான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019, 2020 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களே மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 12 பேர் தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமிழர் தாயகத்தில் கைதான இளைஞர்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்கின்றனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பூநகரி முக்கொம்பன் பகுதியில் கைது செய்யப்பட் உ.உமாகாந்தன், ர.சயந்தன், வி.இன்பராஜ், மகேந்திரன் பார்த்தீபன் மற்றும் வடமராட்சி தாளைடியை சேர்ந்த செ.உதயசிவம் உட்பட 12 பேர் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டம்
இந்த போராட்டத்தின் போது, “தம்மை வழக்கில் இருந்து விடுதலை செய்யவேண்டும் அல்லது பிணையிலாவது விடுதலை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையை சிறைச்சாலை நிர்வாகத்திடம் கடிதம் மூலம் அறிவித்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
