நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இடமாற்றப்பட்ட கைதிகள் பலி: அரசாங்கத்திற்கு பறந்த கோரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் நிலையைத் தொடர்ந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட கைதிகள் சிலர் உயிரிழந்த சம்பவம் குறித்து உடனடியாக சுயாதீனமான மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய விசாரணையை நடத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) இந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் விடுத்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக எனக் கூறி கைதிகள் குழுவொன்று வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருந்தது.
இடமாற்றங்கள்
இருப்பினும், இந்த இடமாற்றங்களின் பின்னர் கைதிகள் சிலர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த மரணங்கள் நிகழ்ந்த விதம் குறித்து பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அதிகாரிகளின் நேரடிப் பொறுப்பாகும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
அதிகளவிலான நெருக்கடி
இந்த மரணங்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் சர்வதேச தரத்திற்கு இணங்க இருக்க வேண்டும் எனவும் ஏதேனும் சித்திரவதைகளோ அல்லது அலட்சியப்போக்கோ இடம்பெற்றிருந்தால் அதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக தாமதமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சிறைச்சாலைகளில் காணப்படும் அதிகளவிலான நெருக்கடி நிலை மற்றும் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக சர்வதேச ரீதியாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்த பின்னணியில் இச்சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்துவது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |