மீண்டும் தெற்காசியாவில் முதலாவதாக இடம் பிடித்த சிறிலங்கா - நிர்மாணிக்கப்பட்டது வணிக வளாகம்!
தெற்காசிய பிராந்தியத்தின் முதலாவது சுங்கவரி இல்லா வர்த்தக வளாகத்திற்கு தேவையான உட்கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள் கொழும்பு துறைமுக நகரில் நிறைவடைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தில் சுங்க வரியில்லா விதிமுறைகள் வரைவு செய்யப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி வணிக நடவடிக்கைகளுக்காக வரும் மக்களுக்கு சர்வதேச தரம் வாய்ந்த அனுபவங்களையும் இங்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கொழும்பு துறைமுக நகரத்தின் வணிக தளமாக அங்கீகரிப்பதற்கு எதிர்பார்ப்பு
இந்த வணிக வளாகம் உலகின் இரண்டு முன்னணி சுங்கவரி இல்லாத நிறுவனங்களால் நடத்தப்படவுள்ளதுடன், இதன் மூலம் கொழும்பு துறைமுக நகரத்தின் வணிக தளமாக அங்கீகரிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த நோக்கத்திற்காக, வாடிக்கையாளர்கள் உலகின் பல்வேறு சமையல் மரபுகளைச் சேர்ந்த உணவைப் பெறுவதற்கு, உலகத் தரம் வாய்ந்த சமையல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் சுங்க வரி இல்லா வணிக வளாகத்தில் வர்த்தகம் செய்பவர்களுக்கு Watering Hole போன்ற ஒரு அனுபவத்தை வழங்குவதாகவும், கொழும்பு உலகின் தலைசிறந்த உணவுகளுக்கு பிரபலமான இடமாக நற்பெயரைப் பெறுவதற்கும் எதிர்பார்ப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை மேலதிக நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை தெற்காசியாவின் மிக உயரமான கோபுரமான தாமரை கோபுரமும் சிறிலங்காவிலேயே முதன் முதல் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.