சிங்களத்தின் கோட்டைக்குள் படுகொலை செய்யப்பட்ட சிவராம்!
ஊடகவியலாளர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்தும் இன்றுவரை விசாரணைகள் இன்றி எந்த ஆட்சியாளர்களாலும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளமை இலங்கையின் பாதுகாப்பு, மற்றும் நீதித்துறை மீதான சந்தேகங்களையே அதிகப்படுத்தி உள்ளது. இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதும், காணாமல் ஆக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகமாக இடம்பெற்ற காலம் ராஜபக்சாக்கள் ஆட்சியில் தான்.
ராஜபக்சாக்களின் ஆட்சியில் தான் இன்று ஒட்டு மொத்த நாடும் அழிந்தது. அதுபோன்று மக்களால் ராஜபக்ச குடும்பமும் அரசாங்கமும் துரத்தப்பட்டனர். அந்த வகையில் தமிழர்களது உரிமை சார்ந்த விடயங்களில் தங்களை அர்ப்பணித்துச் சேவை செய்யும் ஊடகவியலாளர்கள் இன்றுவரை இந்தச் சிங்கள இனவாத அரசாங்கத்தாலும், ஒட்டுக் குழுக்களாலும் அச்சுறுத்தப்பட்டும், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் வருகின்றனர்.
ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படும் நிலை
குறிப்பாக வடக்கு கிழக்கில் தற்போது இது வேறுவிதமாக தொடர்ந்தும் அரங்கேறி வருகிறமை இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் பற்றிய பெரும் சவாலையே ஏற்படுத்துகின்றது. இந்த நாட்டில் அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகவியலாளர்கள் மீது யாரும் கை வைக்க முடியும் என்ற பாதுகாப்பு அற்ற சூழ்நிலைதான் இன்றுவரை தொடர்கிறது.
உண்மையில் படுகொலை செய்யப்பட்ட சிவராம் பல ஊடகவியலாளர்களை உருவாக்கி இருந்தாலும் தன்னைப் போன்று ஒரு புலனாய்வு அறிக்கையிடல் செய்ய கூடிய ஊடகவியலாளர்களை உருவாக்க முடியாத சூழ்நிலை தமிழ் ஊடகப் பரப்பில் ஏற்பட்டது மிகவும் கவலைக்குரிய விடயமே.
ஆனாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பொக்கிஷம் என பலராலும் பேசப்படும் சிவராம் பிறந்த மண்ணில் இன்று ஒட்டுக் குழுக்களாலும் அரச துணை படைகளாலும் ஊடகவியலாளர்களை கொச்சைப்படுத்தும் விதத்திலும், ஊடகவியலாளர்களின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்திலும் சில தொண்டு நிறுவனங்களும் சில அரச கட்டமைப்புகளும் தோழர்களுக்காக போலியான முகநூல்களில் பதிவிடுவது, பதிவிடுபவர்களை ஊடகவியலாளர்கள் என அடையாளப்படுத்தி தரக்குறைவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை மட்டக்களப்பு மண்ணின் பொக்கிஷமான சிவராம் போன்றவர்களுக்கு செய்யும் ஒரு துரோகமாகத்தான் பார்க்க வேண்டும்.
தலைநகரில் படுகொலை
இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு 18 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று 29ம் திகதி அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு மறுநாள் ஏப்ரல் 29 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இலங்கையின் உயர் பாதுகாப்பு வலயமான நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் அவரது சடலம் மீட்கப்பட்டது என்றால் அவர் யாரால் படுகொலை செய்யப்பட்டிருக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திர மீதான கொடூரமான அடக்குமுறைகள் சிவராமின் காலம் தொடங்கி இன்று வரையும் தொடர்கிறது. சிவராம் படுகொலை செய்யப்பட்டு 18 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த நாட்டில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள், விசாரணைகள், கைதுகள், புனையப்பட்ட வழக்குகள், அச்சுறுத்தல்கள் என்பனவும் தொடர்ந்து கொண்டே செல்கிறன.
இதுவரையில் நிமலராஜன் முதல் சிவராம் உட்பட பல ஊடகவியலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நேரத்தில் மாமனிதர் சிவராமை நாம் மீண்டும் நினைவு கூருகின்றோம். ஊடகவியலாளர் சிவராமின் வாழ்க்கை வரலாறு அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக தங்களது உரிமைகளுக்காக போராடி வரும் தமிழ் சமூகத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் துணிவுடன், தங்களது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தொடர்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஊடகவியலாளர் சிவராமின் வாழ்க்கை வரலாறு மீள் பதிவிடப்பட்டுள்ளது.
ஊடகத்துறை பயணம்
1959, ஓகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் தி ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள்நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவலாக வாசிக்கப்பட்டன. பத்தி எழுத்தாளராக, அரசியல் ஆய்வாளராக, படைத்துறை ஆய்வாளராக பல்வேறு பரிமாணங்களை கொண்ட சிவராம் ஆரம்பத்தில் 1980களில் விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் (புளொட்) முழுநேர செயற்பாட்டாளராக மாறிய சிவராம் 1990களின் நடுப்பகுதியில் அதன் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகமாகக் கடமையாற்றியவர். 1990களின் இறுதிப்பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளில் நடைமுறைகளில் ஈர்க்கப்பட்டவராகி, விடுதலைப் புலிகளின் படைத்துறை வெற்றிகள் ஈழப் போராட்டத்திற்கு வலுவை வழங்கும் என சிவராம் தனது எழுத்துக்களில் எழுதினார்.
தமிழ் தேசியம் சார்ந்து ஆங்கிலப் பத்திரிகைகளில் எழுதிவந்த சிவராம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்ப்புக்களையும் கடந்தே எழுதிவந்த அவர் அரசாங்கத்தினாலும், அரசாங்க சார்புக் குழுக்களாலும் புலிகளின் ஆதரவாளராக, அனுதாபியாக, செயற்பாட்டாளராக பார்க்கப்பட்டு கடுமையான நெருக்குதல்களை சந்தித்து, இறுதியில் படைப் புலனாய்வாளர்கள், மற்றும் அரசசார்பு கூட்டு செயற்பாட்டாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சிவராமுக்கு விடுதலைப் புலிகள் மாமனிதர் என்ற தமது விருதை வழங்கினர்.
நீதியில்லாப் படுகொலைகள்
இலங்கையில் நிலவும் கொடூரமான ஊடக, கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலை காட்டும் சிவாரமின் படுகொலை நடந்து 18 வருடங்கள் கடந்தபோதும் கொலைகளுக்கு பொறுப்பான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் படுகொலை செய்யபட்ட ஊடகவியலாளர்களுக்கு காலாகாலமாக நினைவு தினங்களும், நினைவேந்தல்களும் நடந்த வண்ணமே இருக்கின்றன.
அவர்களது கொலைக்கான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிவராமின் 18வது ஆண்டு தினத்திலாவது இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களுக்கான சர்வதேச விசாரணையொன்றை நடத்த சர்வதேச ஊடக நிறுவனங்கள் முன் வருவதோடு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதியை நிலைநாட்ட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
அதிபர் மாறினாலும் தற்போது உள்ள ஆட்சியாளர்களின் காலத்திலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும் இந்தக் கொடூர ஆட்சியாளர்களின் தற்போதைய காலத்திலும் ஊடகங்கள் மீதான அடக்குமுறையும் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையும் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது.
ஆகவே சர்வதேச நாடுகளில் ஊடகத்திற்கும், ஊடகவியலாளர்களுக்கும் எவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படுகின்றதோ அந்தநிலை இலங்கையிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது காலத்தின் தேவையாக இருக்கின்றது.
என்னதான் அச்சுறுத்தல்கள் வந்தாலும், விமர்சனங்கள் வந்தாலும், தரக்குறைவான பதிவுகள் வந்தாலும், எம்மை விமர்சித்தாலும், கேவலப்படுத்தினாலும் தராகி சிவராம் விட்டுச்சென்ற அந்த இடத்தை நிரப்புவதற்காக தொடர்ச்சியாக அவரின் வழியில் பயணிக்கும் எமது பயணமும் தொடரும் என்பதே நிதர்சனமான உண்மை.
