பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக கடத்திச் சென்ற கும்பல் - துப்பாக்கி சூட்டையடுத்து இடம்பெற்ற சம்பவம்!
சிறிலங்கா காவல்துறையின் பெண் உத்தியோகத்தரை சிலர் கடத்திச் செல்ல முயன்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் உத்தியோகத்தர் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்த போதே பலவந்தமாக காருக்குள் ஏற்றி கடத்திச் செல்ல முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
போதைப்பொருள் கடத்தல் சம்பவங்களைத் தடுக்கும் செயற்பாடாக காவல்துறையினர் வீதி சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறை துப்பாக்கி பிரயோகம்
இதன் போதே வீதியில் பயணித்த கார் ஒன்றை தடுத்து சோதனை செய்ய முற்பட்ட போது காரிற்குள் இருந்த சிலர் பெண் காவல்துறை உத்தியோகத்தரை பலவந்தமாக இழுத்து ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.
அதனையடுத்து, அங்கிருந்த ஏனைய காவல்துறை உத்தியோகத்தர்கள் சுமார் 7 கிலோ மீற்றர் தூரம் காரை துரத்திச் சென்று அதனை நிறுத்துவதற்காக காரின் சக்கரத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
அதனையடுத்து, அம்பான்பொல பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் உட்பட மூவர் கைது
அதன் போது காருக்குள் இருந்து 6 கிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். காரில் கடத்திச் செல்லப்பட்ட பெண் காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்த நிலையில், அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 35 வயதான ஆணும், 22 மற்றும் 45 வயதான பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் இன்று மஹாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
