இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய போக்குவரத்து திட்டங்கள்!! வெளியான அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
விசேட தொடருந்து சேவைகள்
இதன்படி, கொழும்பில் இருந்து கண்டிக்கான சொகுசு தொடருந்து சேவை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. களனிவெலி ரயில் பாதையில் இன்று புதிய அலுவலக தொடருந்து ஒன்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றது.
கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையிலான தொடருந்து சேவை வார இறுதி நாட்களில் ஒழுங்கு செய்யப்பட இருக்கின்றது.
மாணவர்களுக்கான பேருந்து சேவை
புதிய போக்குவரத்துத் திட்டத்தின் கீழ் சிசுசரிய என்ற மாணவர்களுக்கான பேருந்து சேவையும் விஸ்தரிக்கப்பட இருக்கிறது. இதன் கீழ் புதிதாக மேலும் இருபது பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.
மேலும், ஒரு மாதத்திற்குள் இந்த பேருந்துகளின் எண்ணிக்கை 50 வரை அதிகரிக்கப்பட எதிர்ப்பார்த்துள்ளது.
பார்க் அன்ட் ரைவ்
இதேவேளை, பார்க் அன்ட் ரைவ் என்ற போக்குவரத்து சேவை இன்று தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. மாக்கும்புர, கடவத்த, கட்டுபெத்த, கொழும்பு கோட்டை ஆகிய இடங்களுக்கு இந்தச் சேவை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.
காலை 6.30 தொடக்கம் காலை எட்டு மணி வரை பத்து நிமிடங்களுக்கு ஒருதடவை இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்த இருக்கின்றது.
மாலை வேளை 4 மணி தொடக்கம் 6 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை பார்க் அன்ட் ரைவ் போக்குவரத்துச் சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினைக்காரணமாக பெரும்பாலானோர் தொடருந்து போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றார்கள் என்றும் இதனால் புதிய திட்டத்தின் கீழ் கூடுதலான ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.