யாழில் திறக்கப்படவுள்ள இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அலுவலகம் : அமைச்சர் அதிரடி அறிவிப்பு
யாழ்ப்பாணத்தில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகம் திறக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (19) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை சூறையாடிய கூட்டம் தொடர்ந்தும் தமது இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக சதி விளையாட்டுகளில் இறங்கி உள்ளனர்.
ஜனாதிபதி நடவடிக்கை
நாம் தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் ஊழல்வாதிகளுக்கு எதிராக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு கைதுகளும் இடம்பெற்று வருகின்றன.

இதனை பொறுக்க முடியாத வங்குரோத்து அரசியல்வாதிகள் இனவாத மற்றும் மதவாதங்களை தூண்டி தான் தப்பித்துக் கொள்ளலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.
அரசாங்கம் என்ற வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
அதன் தொடர்ச்சியாக ஊழல் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகங்களை திறக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்திலும் அதற்கான அலுவலகம் ஒன்றை திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் விரைவில் குறித்த அலுவலகம் திறக்கப்படும்.
ஆகவே நாட்டை அதல பாதாளத்துக்குள் தள்ளுகின்ற, தள்ளிவிட்ட பழைய மற்றும் புதிய ஊழல்வாதிகளுக்கு எதிராக விரைவான விசாரணைகளை மேற்கொள்ள முடியும்“ என அவர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |