வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்படுகின்றார் மனித உரிமை ஆணையாளர் - கடும் அதிருப்தி
பாடசாலை மாணவர்களை அதிபர் தண்டிப்பது போல மனித உரிமை ஆணையாளர் செயற்பட முடியாது, மனித உரிமை ஆணையாளர் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை மீறி செயற்பட்டுள்ளார் என சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான முகன்மைக் குழு இலங்கையை இன்னொரு தீர்மானத்திற்கு அனுசரணை வழங்குமாறு இலங்கையை கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
தொடர்ந்து தெரிவிக்கையில், “அது உள்ளடக்கத்தை பொறுத்த விடயம். பெரும்பான்மையான மக்களினது விருப்பத்திற்கு மாறான அரசமைப்பிற்கு முரணான தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கும் என முகன்மை குழு எதிர்பார்க்க முடியாது. கடந்த தேர்தலின் போது மக்கள் தாங்கள் எதற்காக வாக்களிக்கின்றனர் என்பது குறித்து நன்கு அறிந்திருந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழு அனைத்து நாடுகளுக்கும் உதவுவதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. முகன்மை குழுக்கள் உட்பட அனைத்து நாடுகளும் தங்கள் மனித உரிமை நிலவரத்தை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை. மீறல்கள் என தெரிவிக்கப்படுபவற்றிற்காக நாடு ஒன்றின் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்காக மனித உரிமை ஆணைக்குழு உருவாக்கப்படவில்லை.
மனித உரிமைகள் நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதி –உள்ளாந்தவை என்பதால் நாங்கள் வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் இல்லாமல் அதற்கு தீர்வைக் காண்போம்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை போன்றவற்றை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தங்களைக் கொடுப்பது மனித உரிமை ஆணைக்குழுவின் இலக்குகளை அடைவதற்கும் முகன்மை நாடுகளுடனான இரு தரப்பு உறவுகளுக்கும் உதவப்போவதில்லை.
2015ம் ஆண்டு அன்று ஆட்சியிலிருந்த அரசாங்கம் அல்லது ஆட்சியுடன் தொடர்புபட்ட ஒருவர் எங்கள் நலனிற்கு முரணான தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கினார் என்பதையும் நாங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.