உலக நாடுகளின் உதாரணமாக மாறிய சிறிலங்கா!
பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்காக ஏனைய நாடுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இலங்கையின் தற்போதைய நிலைமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை தற்காத்துக்கொள்ள முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுக்காதது, அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால், இலங்கையில் உணவு, எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக உலகில் பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் நிர்வாக அதிகாரி அசீம் ஸ்டெய்னர் கூறியுள்ளார்.
அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அறிவுறுத்தல்
குறிப்பாக கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுமாறு அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு கூறியுள்ளது.
இது சம்பந்தமாக உலக உணவுத்திட்டம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு உலகம் முழுவதும் 828 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அது 2020 ஆம் ஆண்டைவிட 46 மில்லியன் அதிகரிப்பு எனவும் உலக உணவுத்திட்டம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.