பெரும் சிக்கலில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்...! வெளியான அதிர்ச்சி தகவல்
இலங்கை அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் விரிவுரையாளர்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக, உயர்கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சிகளின் தரம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கங்களின் கூட்டமைப்பின் (FUTA) தலைவர் பேராசிரியர் பிரகீத் வீரதுங்க எச்சரித்துள்ளார்
இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்துள்ள அவர், “தேவைக்கும் இருப்புக்குமான பாரிய இடைவெளி அரச பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப திறம்படச் செயல்பட 12,000 முதல் 13,000 நிரந்தர விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர்.
தற்காலிக விரிவுரையாளர்கள்
அத்தோடு கூடுதலாகச் சுமார் 4,000 தற்காலிக விரிவுரையாளர்களும் தேவை ஆனால் 2025 ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் சேர்த்து வெறும் 6,800 நிரந்தர விரிவுரையாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.

பல்கலைக்கழகக் கட்டமைப்பு சுமுகமாக இயங்கக் குறைந்தபட்சம் 8,000 நிரந்தர விரிவுரையாளர்களாவது அவசியமாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
துறை ரீதியான மாணவர் - ஆசிரியர் விகிதாச்சாரம் (Ideal Ratio) ஒவ்வொரு துறைக்கும் இருக்க வேண்டிய உகந்த விரிவுரையாளர் - மாணவர் விகிதத்தை அவர் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார்
- நிர்வாகத் துறை (Management): 18 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
- தகவல் தொழில்நுட்பம் (IT): 10 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
- கால்நடை அறிவியல் மற்றும் பல் மருத்துவம்: 5 மாணவர்களுக்கு ஒரு விரிவுரையாளர்.
புதிய சேர்க்கை
மேலும் தெரிவித்த அவர், “ஒவ்வொரு மாதமும் 20 முதல் 30 விரிவுரையாளர்கள் பல்கலைக்கழகக் கட்டமைப்பை விட்டு வெளியேறுகின்றனர்.
புதிதாகப் பணியில் சேருபவர்கள் பெரும்பாலும் முதலாம் வகுப்புத் தேர்ச்சி (First class) பெற்ற இளம் தகுதிகாண் விரிவுரையாளர்களாக இருக்கும் வேளையில், வெளியேறுபவர்கள் பல வருட அனுபவமும் உயர் தகுதிகளும் கொண்ட பேராசிரியர்கள் ஆவர் இதனால் கல்வி கற்பித்தலின் தரம் பாதிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 1,400 விரிவுரையாளர்களைப் பணியமர்த்த அரசாங்கம் அனுமதி அளித்தபோதிலும் தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால் அதில் 48% முதல் 49% வரையான இடங்களே நிரப்பப்பட்டுள்ளன (குறிப்பாக மருத்துவம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில்).
மேலும், பல நியமனங்கள் புதிய சேர்க்கையாக இல்லாமல் வெளி மாகாணப் பல்கலைக்கழகங்களில் இருந்து நகரப் பல்கலைக்கழகங்களுக்கான இடமாற்றங்களாகவே அமைகின்றன.
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 36% வரை வருமான வரி விதிக்கப்படுகிறது. மேலும், அவர்கள் வேறு வழிகளில் வருமானம் ஈட்டவும் கட்டுப்பாடுள் உள்ளன.
விரிவுரையாளர்கள்
விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் 20% ஆராய்ச்சிக் கொடுப்பனவுக்கும் (Research allowance) வரி விதிக்கப்படுவதால் அவர்கள் புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடத் தயங்குகின்றனர்.
முன்பு விரிவுரையாளர்கள் ஓய்வுபெறும்போது பல்கலைக்கழகங்களே நேரடியாகப் புதியவர்களை நியமிக்க முடிந்தது.

ஆனால் இப்போது மேலாண்மை சேவைகள் திணைக்களத்தின் (Department of Management Services) அனுமதியைப் பெற வேண்டியுள்ளதால் புதிய நியமனங்களுக்குப் பல மாதங்கள் தாமதமாகிறது.
இந்த நிலைமையிலும் பல்கலைக்கழகங்களை ஓரளவுக்கு இயக்க முடியும் ஆனால் வழங்கப்படும் பட்டங்களின் தரம் நிச்சயம் வீழ்ச்சியடையும்.
இந்தத் தர வீழ்ச்சி உடனடியாகத் தெரியாது ஆனால் இன்னும் சில வருடங்களில் இங்கிருந்து வெளியேறும் பட்டதாரிகளின் தரம் மூலமாக இது நாட்டிற்குப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 18 மணி நேரம் முன்