கோட்டாபயவிற்கு எதிரான கோசங்களுடன் வவுனியா பல்கலை மாணவர்கள் மாபெரும் பேரணி!
வவுனியா பல்கலைக்கழக மாணவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த போராட்டம் இன்று காலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமான பேரணி வைத்தியசாலை சுற்றுவட்டத்தினூடாக கடைவீதியை அடைந்து கடைவீதியூடாக மணிக்கூட்டுக்கோபுரத்தை சென்றடைந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து பழைய பேருந்து நிலையத்தினை சென்றடைந்திருந்தது. இதன்போது அரச தலைவர் கோட்டபாய மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
இதன் காரணமாக ஏ9 வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டபோதிலும் போக்குவரத்து காவல்துறை மாற்றுவழியினூடாக வாகனங்களை செல்ல ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
இந்நிலையில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக மாணவர்கள் நீண்ட நேரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டமையினாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பு மற்றும் முற்சக்கரவண்டி சாரதிகள் குடிநீர்ப்போத்தல்களை வழங்கி தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.








