கோட்டாபயவை கைது செய்யும் தொடர் முயற்சியில் யஸ்மின் சூகா - வலுவான சாட்சியங்கள் சமர்ப்பிப்பு!
ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் சிரேஷ்ட அதிகாரி யஸ்மின் சூகா, சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் 63 பக்கத்திலான முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த முறைப்பாட்டில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் யஸ்மின் சூகாவின் கோரிக்கைக்கு சிங்கப்பூர் சட்டமா அதிபர் இன்னமும் பதிலளிக்கவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
சிங்கபூர் சட்டமா அதிபரிடம் முறைப்பாடுகள் சமர்ப்பிப்பு
சிறிலங்காவில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியையடுத்து நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவில் உள்ள கன்ஷி தீவில் தஞ்சமடைந்தார்.
பின்னர் அங்கு இருந்து சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச 15 நாள் சிங்கப்பூர் விசாவைப் பெற்றுக்கொண்டிருந்தார். இந்நிலையிலேயே அந்நாட்டு சட்டமா அதிபருக்கு கோட்டாபய தொடர்பிலான முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூர் உலகளாவிய நீதிமன்ற அமைப்பில் இணைந்த நாடாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்காவின் முன்னாள் அதிபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஒவ்வொன்றாக யஸ்மின் சூகா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கோட்டாபய, தற்போது அதிபருக்குரிய சிறப்புரிமைகளை இழந்துள்ளதாகவும், இந்த வழக்கு சர்வதேச நீதிமன்றத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியங்களுடன் பதிவான முறைப்பாடு
அதேவேளை அவர் தனது முறைப்பாட்டில் சாட்சிகளையும் பெயரிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் யார் என்பதை வெளியிடவில்லை.
இவ்வாறான நிலையில், தற்போது எந்த நாட்டில் கோட்டாபய இருக்கிறார் என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகிவில்லை. ஆனால் அவர் டுபாயில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
