ரஞ்சனை விடுதலை செய்யவில்லையெனில் நூற்றுக்கணக்கானோருடன் படையெடுத்து வருவோம்!
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திலாவது விடுதலை செய்ய வேண்டும் என கோரி, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் வெலிகடை சிறைச்சாலைக்கு எதிரில் நேற்று நடைபெற்றுள்ளது. மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஊர்வலமாக செல்லும் வழியில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு அரச தலைவர் மன்னிப்பு வழங்க முடியுமாயின் ஏன் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வழங்க முடியாது என எஸ்.எம்.மரிக்கார் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ச, மைனா ராஜபக்ச, காக்கா ராஜபக்ச, சிக்கி ராஜபக்ச உட்பட அனைத்து ராஜபக்சவினரையும் வீட்டுக்கு அனுப்புவதற்காக மட்டுமல்ல, கொள்ளையடித்தவர்களை சிறையில் அடைக்க, ரஞ்சனை சிறையில் இருந்து விடுவிப்பதற்காக நாங்கள் மே தின ஊர்வலத்தில் செல்கிறோம்.
உண்மையை பேசிய ரஞ்சன் ராமநாயக்கவை சிறையில் அடைத்து விட்டு, கொள்ளையடித்தவர்கள் பதுங்குகுழிகளில் மறைந்துள்ளனர். கொழும்புடன் மோதி பார்க்க வேண்டாம் என நாங்கள் ராஜபக்சவினருக்கு கூற விரும்புகிறோம்.
வெசாக் பௌர்ணமி தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்கவில்லை என்றால், நாங்கள் லட்சக்கணக்கில் மக்களை திரட்டிக்கொண்டு இங்கு வருவோம். கொலை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வெலிகடை சிறையில் அடைக்கப்பட்டிருந்த துமிந்தவை ராஜபக்சவினர் விடுதலை செய்தனர்.
உண்மையை பேசிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு விடுதலை வழங்கவில்லை. வெசாக் பௌர்ணமி தினத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யவில்லை என்றால், நாங்கள் லட்சக்கணக்கில் வெலிகடைக்கு வந்து, சிறையில் இருந்து ரஞ்சனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்போம் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.