சிறிலங்கா அரசாங்கத்தினுடைய பொருளாதார திட்டம் தோல்வி - சுட்டிக்காட்டும் தமிழ் எம்.பி
மக்களுடைய சுய பொருளாதரத்தை கட்டி எழுப்புகின்ற திட்டங்களை அறிவிப்பதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர்சிவஞானம் சிறீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம்( 5)யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கடுமையான வறட்சி ஏற்பட்டு, உடவளவு நீர்த்தேக்கத்தில் விவசாயிகளுக்கான தண்ணீர் வெட்டப்பட்டு இருப்பதால் தென் பகுதியில் இருக்கின்ற சிங்கள விவசாயிகள்போராட்டங்களை முன்னெடுத்து இருப்பதாக நாங்கள் செய்திகளில் காண்கின்றோம்.
நான் நினைக்கின்றேன் இந்த நாட்டினுடைய முதுகெலும்பாக இருப்பது பயிர்ச்செய்கையும், பயிர்ச்செய்கையாளர்களும். இவர்கள் பாதிக்கப்படுகின்ற பொழுது இந்த நாட்டினுடைய பெருவருமானம் அடியோடு பிடுங்கப்படுவதற்கான சாத்தியம் நிறையவே உண்டு
வெளிநாட்டு கடன்

ஆகவே அதற்கான ஒரு அடிப்படையை இந்த அரசாங்கம் சரியான முறையில் கொண்டு வரவில்லை, அரசாங்கத்திடம் இருக்கும் திட்டங்களை நாங்கள் பார்த்தால் வெளிநாடுகளில் இருந்து கடனை வாங்குவது அல்லது இறக்குமதி செய்வது, சுற்றுலா பயணிகள் வந்து காசு தந்தால் இந்த நாட்டை அபிவிருத்தி செய்வது என்ற எண்ணங்களோடு இருக்கின்றார்களே தவிர இந்த நாட்டுக்குள்ளயே சுயமான உற்பத்திகளையோ, அல்லது தொழில் உற்பத்திகளையோ, வாழுகின்ற மக்களுடைய சுய பொருளாதரத்தை கட்டி எழுப்புகின்ற திட்டங்களையோ அரசாங்கம் அறிவிப்பதற்கு தயாராக இல்லை,
இதனால் இந்த அரசாங்கத்தினுடைய பொருளாதார திட்டம் தோல்வி கண்டிருக்கிறது. இலங்கை முதலில் தன்னுடைய நிரந்தரமான பொருளாதாரத் திட்டத்தை சரியான முறையில் வகுக்க தவறினால் இன்னும் தொடர்ந்து இதே வறுமை நிலையும், பொருளாதார இடைஞ்சலையும் இலங்கை எதிர்கொள்ளும் என தெரிவித்தார்.