பிரித்தானியாவில் கடலில் மூழ்கி பலியான இலங்கை இளைஞன்!
பிரித்தானியாவின் - கிழக்கு சசெக்ஸில் உள்ள கேம்பர் செண்ட்ஸ் கடற்கரையில் நீராடச்சென்ற பிரித்தானிய குடியுரிமை பெற்ற இலங்கை இளைஞர் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை(09) ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவ தினத்தன்று நீரில் சிக்கித் தவித்த மூன்று பேருக்கு உதவுவதற்காக அவசர சேவைகள் அழைக்கப்பட்டதாகவும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் ஒருவர் கடலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழப்பு
ஆனால், மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சிகளையும் மீறி, சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அவருடன் வந்த 16 வயதுச் சிறுவன் மற்றும் 24 வயதுடைய மற்றொரு நபர் ஆகிய இருவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பியிருந்ததாக கூறப்படுகிறது.
ஒருவருக்கொருவர் அறிமுகமான இந்த மூன்று நபர்களும் லண்டனிலிருந்து இந்த கடற்கரைக்கு வந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
மரண விசாரணை
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் அவசர காலப் பணியாளர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் சசெக்ஸ் காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த மரணத்தில் எந்தவித சந்தேகத்திற்குரிய பின்னணியும் இல்லை என்றும், இது குறித்து மரண விசாரணை அதிகாரி ஆராய்வார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |