15 வயது சிறுமி மீதான பாலியல் அத்துமீறல்: குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள தேரர்
சிறுமி ஒருவரைத் தகாத முறைக்கு உட்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் மறுத்துள்ளார்.
அதேவேளை, சட்ட நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகச் சந்தேகநபரான தேரருக்கு எதிராகப் புதிய விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பிக்க அனுராதபுரம் பிரதம நீதவான் நேற்று (12-05-2026) மறுத்துள்ளார்.
அனுராதபுரம் பிரதம நீதவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதூரமான குற்றச்சாட்டு
இதன்போது சந்தேகநபரான தேரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாரதூரமான பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளைத் தனது கட்சிக்காரர் வன்மையாக மறுப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இதன்போது கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்ற இலக்கம் எட்டினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் கீழ் தற்போது விளக்கமறியலில் உள்ள சந்தேகநபரான தேரர், உடல்நலக் குறைவு காரணமாக அனுராதபுரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை எனச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட முறையான விளக்கமறியல் உத்தரவு அனுராதபுரம் நீதிமன்றத்திற்குக் கிடைக்கவில்லை என்றும் எனவே சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாத நிலையில் புதிய விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பிக்கத் தனக்குச் சட்ட அதிகாரம் இல்லை என்றும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனை
இதனடிப்படையில் வழக்கை மே 15 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணை தொடர்பில் மேலும் பலரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான தேரர் நீண்ட தூரம் பயணம் செய்யக்கூடிய நிலையில் இல்லை என்றும் அவருக்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் தேவை என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் மருத்துவ அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளனர்.
15 வயது சிறுமியைத் தவறான முறைக்கு உட்படுத்தியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் பிரதம நீதவான் பிறப்பித்த கைது உத்தரவைத் தொடர்ந்து மே எட்டாம் திகதி கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வைத்து தேரர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |