நாட்டை அதளபாதாளத்திற்கு கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்களே - முத்தலிப் நெளஷாத்
அதிசயத்தக்க பெரும் வளங்களைக் கொண்ட எமது நாட்டை அதள பாதாளத்திற்கு கொண்டு சென்ற பெரும் கைங்காரியத்தை செய்தவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர்களே என உதவும் சிறகுகள் அமைப்பின் தலைவர் முத்தலிப் நெளஷாத் தெரிவித்தார்.
நேற்று(8) அக்கரைப்பற்று பிராந்தியத்தில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் சிறகுகள் அமைப்பினூடாக உலர் உணவு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இனவாதத்தை கட்டவிழ்த்தல்
இதன்போது மேலும் உரையாற்றிய அவர், “ராஜபக்ச அரசாங்கம் நாட்டின் வளங்களை சுரண்டுவதும், இனவாதத்தை கட்டவிழ்த்து விடுவதுமான செயற்பாட்டிலே ஆட்சி செய்து வந்தனர்.
இனவாதத்தின் மூலம் கட்டிய சாம்ராஜ்ஜியம் அதே மக்களால் தன் கண்முன்னே தகர்த்தெறியப்பட்ட வரலாற்று நிகழ்வு எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
ஜனநாயக வழிமுறைகளைக் கடந்து அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க, ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்ற வந்தவர் எனும் பழிச்சொல்லில் இருந்து விடுபடவும், கொள்ளையடிக்கப்பட்ட நாட்டின் சொத்துக்களை மீளப் பெறவும் சட்டம் குற்றவாளிகள் மீது பாய வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்யும் போதுதான் இந்த அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்” - என்றார்.
