சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு இது நேரமல்ல! அரசாங்கத்திற்கு இடித்துரைத்த சஜித்
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை
அரசாங்கம் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், இதன்மூலம் நாட்டுக்கு மேலும் சுமைகள் ஏற்படுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் பங்களிப்பு வழங்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
“தற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றாலும், அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் அரசியல் சூதே இத்தகைய கலந்துரையாடல்களில் காணப்படுகிறது.
இந்நேரத்தில், தன்னைப் பற்றி சிந்திப்பதை விட நாட்டைப் பற்றி சிந்திப்பதே இடம் பெற வேண்டும்.
அமைச்சர்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதால் நாட்டுக்கு மேலும் சுமைகளை ஏற்படுத்ததாது, புதிய கட்டமைப்பின் கீழ் தேசிய ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை எட்ட வேண்டும்.
நாடு குறித்து சிந்திக்கவும், நாட்டுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய தருணமும் வந்துள்ளது. சுயநலத்திற்கு பதிலாக, பரோபகார மனோபாவமும் சந்தர்ப்பவாதத்திற்கு பதிலாக நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்கும் மனோபாவமும் வேண்டும்.
சலுகைகள், வரப்பிரசாதங்களை பெற்று மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு பதிலாக அறிவார்ந்த முறையில் நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன்வர வேண்டும்.
பங்கேற்பு அபிவிருத்தி மூலம் நாட்டை கட்டியெழுப்புவதே மேற்கொள்ளப்பட வேண்டும்
ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு சகல கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், நாடாளுமன்ற குழு அமைப்பின் ஊடாக சாதகமான பங்களிப்பை வழங்க முடியும்.
வரப்பிரசாதங்களை பெறக்கூடிய சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு இது நேரமல்ல. தற்சமயம் பங்கேற்பு அபிவிருத்தி மூலம் நாட்டை கட்டியெழுப்புவதே மேற்கொள்ளப்பட வேண்டும்.
இது தொடர்பில் நானும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி நம்பிக்கை கொள்கிறோம்” என்றார்.
