தேர்தல்களை நடத்தும் திட்டம் எதுவும் இல்லை! திட்டவட்டமாக அறிவித்தார் ரணில்
அடுத்த இரண்டு வருடங்களுக்கு எந்த தேர்தலையும் நடத்த முடியாது என அதிபர் ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தேர்தலை நடத்துமாறு கோரி கடந்த சில நாட்களுக்கு முன் மக்கள் விடுதலை முன்னணியால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டம் தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, எதிரணியில் உள்ள ஒரு சில கட்சிகள் கூறுவது போல் தேசிய ரீதியில் தேர்தல் ஒன்றை இப்போதைக்கு நடத்த முடியாது. இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடாத்த தீர்மானம்
இந்நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலையாவது நடத்தும்படி சில கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. அது தொடர்பில் பரிசீலித்து வருகின்றோம்.
முதலில் மக்களின் வயிற்றுப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவேண்டும். அதன் பின்னரே ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என கூறியுள்ளார்.
அதேவேளை, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் தற்போதைய அரசிடம் உண்டு. நானும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்துடன்தான் அதிபராக தெரிவாகினேன். ஆகையால், தேர்தலை வைத்துப் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எதிரணி கட்சியின் செயற்பாடு
எந்தவொரு தேர்தலையும் மக்கள் இப்போது விரும்பவில்லை. எதிரணியிலுள்ள ஒரு சில கட்சிகள் தான் தேர்தலை விரும்புகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், முதலில் பொருளாதார நெருக்கடிக்கு ஒன்றிணைந்து தீர்வு காண முன்வருமாறு தேர்தலை விரும்பும் கட்சிகளுக்கு மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கின்றேன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

